டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு
ADDED : நவ 21, 2024 06:02 PM

சென்னை: மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி கிராமம் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன. அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த ஜூலை 24 ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டிகிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து நவ., 7 ல் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுனவமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது.
முன்னதாக அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி ஒன்றில், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும் எனக்கூறினார்.