அரசு பஸ்சில் ரேடியோ கூடாது; டிரைவர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
அரசு பஸ்சில் ரேடியோ கூடாது; டிரைவர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
ADDED : பிப் 25, 2026 09:15 PM

சென்னை:'அரசு பஸ் டிரைவர், நடத்துநர், பஸ் இயக்கத்தின் போது டேப் ரிக்கார்டர், ரேடியோ பயன்படுத்தக்கூடாது,' என, அரசு போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் இருந்து, அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பஸ் டிரைவர்கள், பஸ் இயக்கும் போது, ரேடியோ மற்றும் டேப் ரிக்கார்டர்கள் பயன்படுத்துகின்றனர். அதிக ஒலி எழுவதாக பயணியரிடையே ஏராளமான புகார்கள் பெறப்படுகிறது. எனவே, அரசு பஸ் டிரைவர், பஸ் இயக்கும் போது, ரேடியோ, டேப் ரிக்கார்டர் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
பலமுறை அறிவுறுத்தியும், சிலர் இதை சரிவர கடைப்பிடிப்பதில்லை. பயன்படுத்தியது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டிரைவர், நடத்துநர் செயல்பாடுகளை, அனைத்து கிளை மேலாளர்கள், பஸ் ஸ்டாண்ட் கண்காணிப்பாளர், வழித்தட பரிசோதக அலுவலர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

