மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்பது சர்வாதிகாரம்: பழனிசாமி
மக்கள் பிரச்னையை பேசக்கூடாது என்பது சர்வாதிகாரம்: பழனிசாமி
ADDED : மார் 29, 2025 04:59 AM

''சட்டசபையில் முதல்வரின் மகன் பேசுவதால், மக்கள் பிரச்னை எதையும் பேசக்கூடாது என்கின்றனர். இது சர்வாதிகாரம்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபை வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நாட்டு மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம்; நாட்டில் நடந்துள்ள பிரச்னைகளை பேச முற்பட்டோம். அனுமதி மறுத்து எங்களை வெளியேற்றி விட்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில், போலீசாக பணிபுரிந்தவர் முத்துகுமார். இவரும், இவரது நண்பர் ராஜாராமனும், கஞ்சா வியாபாரிகளால் வெட்டப்பட்டுள்ளனர். இதில் முத்துகுமார் இறந்தார். ராஜாராமன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் முழுதும் கஞ்சா, போதைப்பொருள் விற்போர் சுதந்திரமாக விற்பனை செய்கின்றனர். இத்தகவலை போலீசாரிடம் தெரிவிப்போர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போலீசாரை கொலை செய்யும் அளவுக்கு, போதைப்பொருள் வியாபாரிகள் துணிவு பெற்றுள்ளனர்.
கடந்த 25ம் தேதி, சிவகங்கையில் பயிற்சி மருத்துவரை, மர்ம நபர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதை கண்டித்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து பேச அனுமதி கேட்டேன். எங்களை திட்டமிட்டு சபாநாயகர் வெளியேற்றினார். மக்களை பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. முதல்வரின் மகன் பேசுவதால், எந்த பிரச்னையும் பேசக்கூடாது என்கின்றனர்; இது சர்வாதிகாரம்.
மக்களுக்காகத்தான் சட்டசபை என்பதை முதல்வரும், சபாநாயகரும் உணர வேண்டும். ஸ்டாலின் வீட்டு மக்கள் அதிகாரத்தில் இருப்பதால், எவ்வளவு முக்கிய பிரச்னையாக இருந்தாலும், சட்டசபையில் பேசக்கூடாது என்பது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க., அரசு செயலற்றதாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக, பொய்யான பிம்பத்தை உருவாக்கி, முதல்வர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.