ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட பழனிசாமி ஆட்சியில் அமைக்கவில்லை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலடி
ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட பழனிசாமி ஆட்சியில் அமைக்கவில்லை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலடி
ADDED : பிப் 15, 2024 02:00 AM
சென்னை:''நான்கு ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட அமைக்கப்படவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
அமைச்சர் சுப்பிரமணியன்: கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 20 மாவட்டங்களில், 1,121 மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பபட்டு உள்ளன. மேலும், 1,251 மருத்துவர்களை நியமிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. செவிலியர்கள் 977 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், 264 ஆரம்ப சுகாதார நிலையங்களும், அதிக படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட்டன.
சுப்பிரமணியன்: நீங்கள் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட அமைக்கவில்லை. தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மத்திய அரசிடம் கேட்டு பெறப்பட்டு உள்ளன.
பழனிசாமி: பல்வேறு கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து கொடுத்துஉள்ளோம். நான்கு ஆண்டுகளில், 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, 2,000 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைத்து கொடுத்தோம். அதை மூடி விட்டீர்கள்.
சுப்பிரமணியன்: நான்கு ஆண்டு கால உங்கள் ஆட்சியில், மத்திய அரசிடம் இருந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற்றதற்கான அரசாணையை காட்டுங்கள். மருத்துவ கல்லுாரி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஆதாரம் இல்லை.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.
அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டு திட்டம். சுடுகாடு, கழிப்பறையில் அவை அமைக்கப்பட்டு, ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

