குளத்தில் மட்டுமல்ல குடும்பங்களிலும் விரைவில் தாமரை மலரும்: தமிழிசை
குளத்தில் மட்டுமல்ல குடும்பங்களிலும் விரைவில் தாமரை மலரும்: தமிழிசை
ADDED : நவ 07, 2024 09:29 PM
சென்னை:''குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்கிறார் அமைச்சர் சேகர்பாபு; தமிழக குடும்பங்களில் தாமரை மலரப் போகிறது,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முன்னேறி விட்டதாக, முதல்வர் சொல்கிறார். ஆனால், சென்னையில் மக்கள் இன்னும் தத்தளிக்கும் சூழ்நிலை தான் நிலவுகிறது. தமிழகத்தில், 90 சதவீத குழந்தைகள் மட்டும் தான் ஆரம்ப கல்வி படிக்கின்றன. மற்ற மாநிலங்களை விட, இதில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதை பள்ளி கல்வித்துறை கவனிக்க வேண்டும்.
தி.மு.க., கூட்டணி எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. எனவே, வரும் 2026 தேர்தல், தி.மு.க., கூட்டணிக்கு இலகுவாக இருக்காது.
சில நாட்களுக்கு முன், கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு, கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். தற்போது, கோவையில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாக்களில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. குறையாக பாடினால் கவர்னர் பொறுப்பேற்க வேண்டுமென்றால், பாடலையே பாடவில்லை என்றால், அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
அமைச்சர் சேகர்பாபு, பூங்கா ஒன்றை பார்வையிட்ட போது, 'குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது' என்று கூறியுள்ளார். குளத்தில் தாமரை வளர்வதை கூட, உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், குளத்தில் மட்டுமல்ல, பல குடும்பங்களிலும் தாமரை மலரப் போகிறது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

