ADDED : ஜன 13, 2026 10:20 PM

சென்னை: 'தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை, இரண்டு நாட்களில் விலகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை:
தமிழகத்தின் ஆண்டு மழை தேவையில் பெரும் பகுதியை, வடகிழக்கு பருவமழை பூர்த்தி செய்கிறது. கடந்த, 2025 அக்., 16ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதில், டிச., 31 வரை இயல்பாக, 44 செ.மீ., மழை பெய்ய வேண்டும். இந்த முறை, 42 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை, அடுத்த இரண்டு நாட்களில் முழுதும் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவந்துள்ளன.
மிதமான மழை
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், 13 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, திருக்குவளை, திருப்பூண்டி பகுதிகளில் தலா, 10; மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம் ஆகிய இடங்களில், தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; லேசான பனிமூட்டமும் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

