மன்மோகன் சிங் இல்லாமல் எதுவும் செய்திருக்க முடியாது: அன்புமணி நெகிழ்ச்சி
மன்மோகன் சிங் இல்லாமல் எதுவும் செய்திருக்க முடியாது: அன்புமணி நெகிழ்ச்சி
ADDED : பிப் 28, 2026 06:31 AM

சென்னை: ''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இல்லாவிட்டால், மத்திய அமைச்சராக இருந்தபோது என்னால் எதுவும் செய்திருக்க முடியாது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
கடந்த 2005ல் மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி இருந்தபோது, பிரசவத்தின்போது தாய், குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த, 'ஆஷா' எனப்படும் அங்கீகாரம் பெற்ற சமூக, சுகாதார ஆர்வலர் என்ற திட்டம் துவங்கப்பட்டது.
அதன்படி, நாடுமுழுதும் 10 லட்சம் கிராமங்களில், ஆஷாக்கள் எனப்படும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இத்திட்டம் குறித்து, ஆஷா என்ற பெயரில், மராத்தியில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் தீபக் பாட்டீல், தயாரிப்பாளர் தைவதா பாட்டீல் ஆகியோருடன் அன்புமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் தாணு, சங்கமித்ரா ஆகியோர் சென்னையில் நேற்று கலந்துரையாடினர்.
அப்போது, அன்புமணி பேசியதாவது:
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, 10 மாதங்கள் திட்டமிட்டு, ஆஷா திட்டத்தை உருவாக்கினோம். கடந்த 20 ஆண்டுகளில் இத்திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. கடந்த 2005ல், தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவத்திற்கு, 300 ஆக இருந்தது.
இப்போது 88 ஆக குறைந்துள்ளது. 2005ல் குழந்தை இறப்பு விகிதம், 1,000 குழந்தைகளுக்கு 68 ஆக இருந்தது; இப்போது, 35 ஆக குறைந்துள்ளது.
ஆஷா மட்டுமல்லாது, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை நான் எடுத்தபோது, எனக்கு உறுதுணையாக இருந்தவர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அவர் இல்லாவிட்டால், என்னால் எதையும் செய்திருக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

