ஆர்.எஸ்.எஸ்., பேரணி வழக்கு அரசு பதிலளிக்க 'நோட்டீஸ்'
ஆர்.எஸ்.எஸ்., பேரணி வழக்கு அரசு பதிலளிக்க 'நோட்டீஸ்'
ADDED : செப் 21, 2024 01:08 AM
சென்னை:விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்களுக்கு, வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் போலீஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுதும், 58 இடங்களில் விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அனுமதி கோரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் ஜோதி பிரகாஷ், சேதுராஜ் வழக்கு தொடர்ந்தனர்.
மனுக்களில், 'ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்வலங்களுக்கு விதிமுறைகள் வகுத்து, கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது' என்று கூறப்பட்டது.
இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகினர்.
மனுக்களுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட போலீசாருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.