நெல்லையப்பர் கோவில் நிலத்தை பாதுகாக்கும் வழக்கில் நோட்டீஸ்
நெல்லையப்பர் கோவில் நிலத்தை பாதுகாக்கும் வழக்கில் நோட்டீஸ்
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
மதுரை:நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சேலம், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமாக, அபிஷேகபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 8,345 ஏக்கர் நிலம் உள்ளது. பவர் கிரிட் கார்ப்பரேஷனுக்கு, அபிஷேகபட்டியில், 53.59 ஏக்கர் நிலத்தை, நிபந்தனைகளுக்குட்பட்டு, அறநிலையத்துறை வழங்கியது.
இழப்பீடாக, 1 கோடியே 60 லட்சத்து, 77,000 ரூபாயை கோவிலுக்கு அந்நிறுவனம் வழங்கியது. இது மிக குறைந்த தொகையாகும்.
கையகப்படுத்திய நிலத்தை தவிர, அக்கோவிலுக்கு சொந்தமான, 306.36 ஏக்கர் நிலத்தை, அனுமதியின்றி அந்நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு இழப்பீடு தொகையை கோவிலுக்கு வழங்கவில்லை; இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு, பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக அறநிலையத்துறை, வருவாய்த்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு, அறநிலையத்துறை செயலர், கமிஷனர், வருவாய்த்துறை செயலருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

