ADDED : நவ 20, 2024 12:25 AM
சென்னை:அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதை கண்டித்து, வரும் 26ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழக வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலர் சு.சங்கரலிங்கம் ஆகியோர் அறிக்கை:
வருவாய் ஆய்வாளர் பணியிடங்களுக்கு, இளநிலை மற்றும் முதுநிலை என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், உயர் அதிகாரிகள் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2021ல் முதல்வர் ஒப்புதல் அளித்தும் நிறைவேற்றப்படவில்லை.
அரசு புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், புது பணியிடங்கள் ஏற்படுத்தப்படாததால், வருவாய் துறை அலுவலர்கள், கடுமையான பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருணை அடிப்படையில், பணி நியமனங்களுக்கான இடங்கள் குறைக்கப்படுவதால், எதிர்காலத்தில் இந்த வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து நிலை வருவாய் அலுவலர்களும், வரும் 26ம் தேதி, பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம், பொது மக்களுக்கான சான்றிதழ்கள் வழங்குவது மற்றும் அரசு விழாக்கள் தொடர்பான பணிகள் பாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.