ADDED : ஆக 21, 2025 01:33 AM

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36.56 கோடி ரூபாயை செலுத்தக் கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித் துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் ஆஜராகி, ''சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் செலுத்த வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, கடந்த ஜூலை 23ல் அனுப்பிய நோட்டீஸ் அடிப்படையில் வசூல் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என, வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு செப்., 2ம் தேதிக்குள் பதிலளிக்க, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார்.