திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 11 கட்டடங்கள் ஆபத்தானவை; உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் 11 கட்டடங்கள் ஆபத்தானவை; உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
UPDATED : ஜூலை 16, 2025 06:30 AM
ADDED : ஜூலை 16, 2025 01:09 AM

மதுரை,: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரே உள்ள சன்னதி தெருவில் பழமையான 11 கட்டடங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரலாம் என போலீசார் திட்டமிட்டு அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் கமிஷனர் லோகநாதன் தலைமையில் செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 3 ஆயிரம் போலீசார் ஜூலை 13 இரவு முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கும்பாபிஷேகம் நடந்த கோயில் கோபுரத்தை, சன்னதி தெருவில் இருந்து ஆர்ச் வரை மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சன்னதி தெருவில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் மேல்பகுதியில் நின்று மக்கள் கும்பாபிஷேகத்தை கண்டனர்.
முன்னதாக சன்னதி தெருவில் உள்ள கட்டடங்கள் போலீசார், மாநகராட்சியால் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 11 பழமையான கட்டடங்கள்ஆபத்தானவை என கண்டறியப்பட் டது. கும்பாபிஷேகத்தன்று பாதுகாப்பு கருதி இக்கட்டடங்களில் மக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. வாழத்தகுதியற்ற இக்கட்டடங்களை பாதுகாப்பு கருதி அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது.
5 ஆண்டுகளில் 6 பேர் பலி
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நுாற்றுக்கணக்கான பழமையான கட்டடங்கள் உள்ளன. இங்கு தீயணைப்பு வசதிகள் இல்லை என தீயணைப்புத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.
பாதுகாப்பற்ற கட்டடங்களை உடனே அகற்ற வேண்டும் என மாநகராட்சி தரப்பில் இருந்து கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த நடவடிக்கை கிடப்பில் உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பழமையான கட்டடங்கள் இடிந்து ஒரு போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

