தமிழன் அல்லாதவன் மண்ணை ஆள்வதற்காக கொண்டு வந்தது தான் திராவிடம்; சீமான்
தமிழன் அல்லாதவன் மண்ணை ஆள்வதற்காக கொண்டு வந்தது தான் திராவிடம்; சீமான்
ADDED : ஜன 03, 2026 10:28 PM

மயிலாடுதுறை: தமிழன் அல்லாதவன் வசதியாக, நம் மண்ணை ஆள்வதற்கும், வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம் என்ற கோட்பாடு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; திராவிட அரசியல் கூட்டங்களிடையே ஒரு நாகரிக நிலை இல்லை. ஒரு கருத்தை சகிக்க இயலாதவர்கள், சகோதரத்துவம், சமத்துவம் பேசுவது என்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. நாம் உலகின் பண்பட்ட நாகரிக குணம் கொண்ட மக்கள்.
இறைவனை விமர்சித்த இவர்கள், ஈவெராவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு நடுங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த நிலத்தில் திராவிடம் என்ற சித்தாந்தம் ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் சமஸ்கிரதத்தைச் சேர்ந்தது.
தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்தது. தமிழர் கழகம் என்று இருந்தால், ஈவெரா தலைமை ஏற்க முடியாது என்று கூறியதால், திராவிட கழகம் என்று மாற்றினார்கள். திராவிடம் என்ற கோட்பாடு, தமிழன் அல்லாதவன் வசதியாக, தனது தாய்நிலத்தை ஆள்வதற்கும், வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்ட ஒன்று.
இவ்வளவு ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஸ்டாலின், திராவிடப் பொங்கல் வைக்கிறார் என்றால், கருணாநிதியின் மகன் திராவிடப் பொங்கல் வைத்தால், இந்த பிரபாகரன் மகன் திராவிடத்தையே பொங்கல் வைப்பான்.
உலகின் மூத்த, சிறந்த தமிழ் மொழியை இந்த தமிழர்கள் வைத்துள்ளார்கள். இதை எந்தப் பிழையுமே சொல்ல முடியவில்லையே, இந்தப் பெருமையை இவனுங்க வைக்கக் கூடாது என்று திட்டமிட்டு, என்னுடைய இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட தமிழன் என்னும் அனைத்து அடையாளங்களையும் அழித்து, திராவிடம் என்று கொண்டு வந்து விட்டான்.
தமிழையும், தமிழனையும் வீழ்த்தியதை தவிர, வேறு எதற்கு திராவிடம் பயன்பாட்டு இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தை இருக்கும் போது, 'கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும், உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்,' என்ற வரிகளை நீக்கியது ஏன்? இதை நீக்கியவரே திருவாரூர் திருடர் தான். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், பாடலையே நீக்குவோம்.
மண்ணை காத்த நம்மாழ்வார் என் இனத்தின் பெரியார். நெல் ஜெயராமன், விஸ்வநாத தாஸ், கீழப்பலூர் சின்னசாமி, நடேசன் உள்ளிட்ட பலரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியாரா?, ஈவெரா என்ன சீர்திருத்தம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.

