கடும் குளிரிலும் செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் தலைமையில் இன்று பேச்சு
கடும் குளிரிலும் செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் தலைமையில் இன்று பேச்சு
UPDATED : டிச 22, 2025 01:25 AM
ADDED : டிச 22, 2025 12:50 AM

சென்னை: பணி நிரந்தம் கோரி, கடும் குளிரிலும் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இன்று(டிச.,22), அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி, சென்னை சிவானந்தா சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற செவிலியர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனால், போலீசார் அவர்களை கைது செய்து, இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு இறக்கி விட்டனர். அவர்கள் அங்கும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, சங்க நிர்வாகிகளுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அதில், உடன்பாடு எட்டப்படவில்லை. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்களை, போலீசார் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பின், செவிலியர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கூடினர். அங்கு, நேற்று நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்; இரவில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில செவிலியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் சுப்பிரமணியன், செவிலியர் சங்கங்களைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகளுடன் இன்று பேச்சு நடத்த உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ அறிவியல் பல்கலையில், இன்று காலை பேச்சு நடக்க உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் செயலர் சுபின் கூறுகையில், ''பணி நிரந்தரம் என்பது, எங்களின் பிரதான கோரிக்கை. அது நிறைவேறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்.

