துாய்மை பணியாளர்களுக்கு சத்துணவு ஊழியருக்கான சலுகை
துாய்மை பணியாளர்களுக்கு சத்துணவு ஊழியருக்கான சலுகை
ADDED : ஆக 07, 2025 12:49 AM
சென்னை:தமிழக ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து, ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பொன்னையா பேச்சு நடத்தினார். அப்போது, தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம், சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர் களுக்கு, ஊராட்சி செயலர் உள்ளிட்ட நிரந்தர பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு, ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனை செய்து வழங்கப்படும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடத்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.
மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும், துாய்மை பணியாளர்களுக்கும், சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்குவது குறித்து, அரசிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.