ADDED : மார் 17, 2024 09:13 PM

சென்னை:பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என, முதல்வருக்கு கவர்னர் ரவி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்த நிலையில், அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் 3 ஆண்டுகள் தண்டனை அளித்தது. இதனால் அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் எம்எல்ஏவாக ஆனார், பொன்முடி. இதனைதொடர்ந்து மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அளித்திருந்தார்.
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வருக்கு கவர்னர் ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது என்றும் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என கவர்னர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..

