மதுரை மாநகராட்சி முறைகேடு வழக்கில் கைதான அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி கைது வளையத்தில் முக்கிய பிரமுகர்கள்
மதுரை மாநகராட்சி முறைகேடு வழக்கில் கைதான அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி கைது வளையத்தில் முக்கிய பிரமுகர்கள்
ADDED : ஜூலை 01, 2025 03:51 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் விதிமீறி வரியை குறைத்து நிர்ணயித்து ரூ.பல கோடி முறைகேடு செய்த வழக்கில் கைதான மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரனுக்கு போலீஸ் விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களில் 3வது மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் இவ்வகை முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், தற்காலிக பணியில் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில்குமரனிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். முதலுதவிக்கு பின் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது வளையத்தில் இருவர்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதானவர்கள் விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு வழங்கினர். குறிப்பாக எவ்வாறு முறைகேடு நடந்தது.
வரியை குறைத்து மதிப்பிட யார் உத்தரவிட்டது உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்தனர். கைதானவரில் ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள விவரங்களையும் குறிப்பிட்டார். இதுபோல் செந்தில்குமரனிடம் விசாரணை நடந்தது. அவரும் தேவையான பதில் அளித்தார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரிடம் சில விவரங்கள் கேட்க முடியாமல் போனது.இவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மாநகராட்சி அளவில் முக்கிய பதவியில் உள்ளவர், மண்டல அளவில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் என இரண்டு பேர் மீதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமை அனுமதி கிடைக்கும்பட்சத்தில் முதற்கட்டமாக இவர்கள் இருவரும் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றனர்.