கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தீவிரம்
கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தீவிரம்
UPDATED : ஜன 22, 2024 12:42 AM
ADDED : ஜன 22, 2024 12:38 AM

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளில், அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில், கிரானைட் குவாரிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவலின்படி, உயர் நீதிமன்றம் இதில் நேரடியாக தலையிட்டது.
அறிவிப்பு
முறைகேடுகள் தொடர் பான ஆதாரங்கள் அடிப்படையில், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் புதிதாக கிரானைட் குவாரிகளை அனுமதிக்க கூடாது என, 2017ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
புதிதாக யாருக்கும் கிரானைட் குவாரி உரிமம் வழங்குவதில்லை என்று, தமிழக அரசும், 2020ல் அறிவித்தது.
இந்நிலையில், 2021 ஆட்சி மாற்றத்துக்கு பின், கனிமவளத்துறைக்கு பொறுப்பேற்ற அமைச்சர் துரைமுருகன், கிரானைட் தொழில் துறைக்கு புத்துயிர் ஊட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டார்.
அதன் அடிப்படையில், புதிதாக கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை, மாவட்ட கலெக்டர்கள் துவக்கி உள்ளனர்.
குறிப்பாக, முறைகேடு புகார் எழுந்த மதுரை மாவட்டத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், புதிதாக குவாரிகள் அமைப்பதற்காக, விண்ணப்பங்கள் பெறும் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
![]() |
ஆர்வம்
தற்போது திருவண்ணா மலை மாவட்டத்தில், 11 இடங்களில் புதிய கருப்பு கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்க முடிவாகி உள்ளது. இதற்கான அறிவிக்கையை, மாவட்ட கலெக்டர் வெளியிட்டுஉள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என, கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மணல் குவாரிகளில், தனியார் ஒப்பந்ததாரர்களால் எழுந்த பிரச்னை அமலாக்கத்துறை விசாரணை வரை சென்றுள்ளது.
இந்தச் சூழலில், சுற்றுச் சூழல் அனுமதி இருந்தும், புதிய மணல் குவாரி களை திறக்க தயங்கும் அதிகாரிகள், கிரானைட் குவாரிகள் திறப்பில், கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- நமது நிருபர் --