இலவச 'ஸ்கூட்டர்' வழங்க ரூ.5,000 லஞ்சம் மாற்றுத்திறனாளிகளிடம் அதிகாரிகள் வசூல்
இலவச 'ஸ்கூட்டர்' வழங்க ரூ.5,000 லஞ்சம் மாற்றுத்திறனாளிகளிடம் அதிகாரிகள் வசூல்
ADDED : ஜூலை 02, 2025 07:46 AM

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அரசு இலவசமாக வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரை வழங்க, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், பயனாளிகளிடம் தலா, 5,000 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கை, கால், தண்டுவடம், போலியோ பாதிப்புக்கு உள்ளான, 75 சதவீதத்திற்கு மேல் குறைபாடுடைய நபர்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
இதைப்பெற தகுதியானவர்கள், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர் பெற, 75 சதவீத குறைபாடு என்றிருந்த தகுதியை, தமிழக அரசு கடந்த ஆண்டு, 60 சதவீதமாக குறைத்தது.
அதன்படி, தமிழகம் முழுதும் விண்ணப்பித்து காத்திருக்கும், தகுதி வாய்ந்த, 26,000 மாற்றுத் திறனாளிகளுக்கு, 'ஸ்கூட்டர்' வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பரில் துவக்கி வைத்தார். அதன்பின், மாவட்டந்தோறும் தகுதியுடைய நபர்களுக்கு, 'ஸ்கூட்டர்' வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு வழங்கும் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டர் பெற, எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் செல்வோருக்கே, முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், மற்றவர்களிடம் ஸ்கூட்டர் பெற, 5,000 தரும்படி கேட்பதாகவும், மாற்றுத்திறனாளிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறியதாவது: உடல் ரீதியாக இயங்க இயலாத மாற்றுத்திறனாளிகள், சுய சார்பு பெறும் வகையில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை அரசு வழங்குகிறது. ஆனாலும், இவற்றை எங்களால் எளிதில் பெற முடியவில்லை. ஆளும் கட்சியினர் பரிந்துரை தேவைப்படுகிறது.
யாருடைய பரிந்துரையும் இல்லாமல் விண்ணப்பித்தால், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பணம் கொடுக்காவிட்டால், விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில்லை. திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பலரும் பணம் செலுத்தியே வாகனம் பெற்றுள்ளனர். திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், வாகனங்களை பெறும் பயனாளிகள் அதை விற்பதும் அதிகரித்துள்ளது.
இவற்றை தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக ஸ்கூட்டர் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
2020ல், 'ஸ்கூட்டர்' பெற விண்ணப்பித்து இன்று வரை காத்திருக்கிறேன்; கிடைக்கவில்லை. எனக்கு பின் விண்ணப்பித்த பலரும், 'ஸ்கூட்டர்' பெற்றுள்ளனர். அதிகாரிகளுக்கு, 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். முடியாதவர்களுக்கு அரசு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது. அதற்கும் பணம் கேட்பது முறையா?
- மணிகண்டன், திருவண்ணாமலை.