'ஓம் சக்தி... பராசக்தி... தி.மு.க., தீயசக்தி': த.வெ.க., நுாதன பிரசாரம்
'ஓம் சக்தி... பராசக்தி... தி.மு.க., தீயசக்தி': த.வெ.க., நுாதன பிரசாரம்
UPDATED : ஜன 13, 2026 03:10 AM
ADDED : ஜன 13, 2026 03:09 AM

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க.,வை விமர்சிக்கும் வகையில் புதுவித பிரசாரத்தை த.வெ.க.,வினர் முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு போட்டியாக நடிகர் விஜய் துவக்கியுள்ள த.வெ.க., முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையேதான் போட்டி என விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். த.வெ.க.,வில் இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் வாயிலாக, தி.மு.க.,விற்கு எதிரான பிரசாரத்தை த.வெ.க., தீவிரப்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மாவட்டம், ஒன்றியம், நகரம் அளவில், த.வெ.க.,வை சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகள், பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகின்றனர்.
போட்டிகளில் பங்கேற்க வரும் சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, பால், முட்டை, ரொட்டி போன்றவையும் வழங்கப்படுகின்றன.
அதை வழங்குவதற்கு முன், குழந்தைகளிடம் ஒரு வசனத்தைச் சொல்லச் சொல்லி த.வெ.க.,வினர் நிர்ப்பந்திக்கின்றனர்.
அதாவது, 'ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க., ஒரு தீயசக்தி' என பத்து தடவை சொன்ன பிறகே பொருட்களை வழங்குகின்றனர். பொருட்களுக்காக காத்திருக்கும் குழந்தைகள் வாயிலாக, தி.மு.க.,வுக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

