ADDED : ஜூன் 22, 2026 01:15 AM

ஜூன் 22, 1912
கேரள மாநிலம், கொடுந்தரப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணா என்பவரின் மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர் ஆலங்குடி ராமச்சந்திரன்.
சிறு வயதிலேயே திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் குடியேறிய இவர், வானொலி கச்சேரிகளை கேட்பதில் ஆர்வமானார். இதையறிந்த இவரது தந்தை, தவில் மேதை நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் இவரை சேர்த்து விட்டார்.
அவரிடம் தவிலும், கடமும் வாசிக்க கற்று கொண்டார். தொடர்ந்து, மாயவரம் குப்புசாமி பிள்ளையிடம் மிருதங்க வாசிப்பை கற்றார். கடத்தை துல்லியமாகவும், நுணுக்கமாகவும், 'கணீர்' ஒலியுடன் கம்பீரமாக இசைத்தவர், இடையில் கடத்தை துாக்கி போட்டு பிடித்து வாசிக்கும் உத்திகளால் கவனிக்கப்பட்டார்.
கர்நாடக இசை ஜாம்பவான்களான செம்பை வைத்தியநாத பாகவதர், எம்.எஸ்.சுப்பு லட்சுமி, மதுரை மணி அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியன், மாலி, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர் உள்ளிட்டோருக்கு பக்கவாத்திய கலைஞராகி புகழ் பெற்றார்.
கடந்த 1975, ஜூன் 15ல், மும்பை சண்முகானந்தா சபாவில், டி.கே.ஜெயராமனுடன் கச்சேரி செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தன் 63வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
