நோயை விட கொடுமையானது 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
நோயை விட கொடுமையானது 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ADDED : மார் 10, 2026 02:12 AM

சென்னை: 'ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது, நோயை விட கொடுமையானது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, மத்திய பா.ஜ., அரசு முயற்சித்து வருகிறது.
கடந்த 2019ல், இந்தோனேஷியாவில், ஜனாதிபதி, தேசிய, மாநில சட்டசபைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது; 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து, தேர்தல்களை இரண்டு முதல் இரண்டரை ஆண்டு இடைவெளியில் நடத்துமாறு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. நம் நாட்டில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' முயற்சியை ஆதரிப்பவர்களுக்கு, இந்தோனேஷியா அனுபவம் ஒரு எச்சரிக்கை.
இந்தியாவில், தேசிய அளவிலான ஒரு அரசியல் அலை, மாநிலத் தேர்தல்களையும் முழுமையாக தாக்கக்கூடும். ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை இந்தியாவை மெதுவாக, ஜனாதிபதி ஆட்சி முறைக்குத் தள்ளுகிறது.
ஒரு மாநில அரசு, பாதியில் வீழ்ந்தால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி, கவர்னர் வாயிலாக மாநிலத்தை மத்திய அரசு நிர்வகிக்கும்.
தேர்தல் நடத்தும் செலவு என்பது, மொத்த பொருளாதார அளவில் மிகச்சிறியது. அதை காரணமாகக் கொண்டு இவ்வளவு பெரிய அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வது நியாயமல்ல.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட மத்திய, மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவைத் திரும்பப் பெற பரிந்துரைத்துள்ளது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது, நோயை குணப்படுத்த அதைவிடக் கொடுமையான மருந்தை தருவதற்கு சமம். தேர்தலை நடத்துவதில் இருக்கும் நிர்வாக சிக்கல்களுக்காக, ஜனநாயகத்தை முடக்க நினைப்பது தவறு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

