ADDED : பிப் 20, 2024 12:57 AM

சென்னை:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை, எஸ்.வி.சேகர் தன் முகநுால் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயவேல் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, எஸ்.வி.சேகருக்கு, ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக, எஸ்.வி.சேகர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று, தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்தார்.

