ADDED : டிச 15, 2024 06:58 PM

தினமும் ஒரு பெருமாள் -01
கடன் பிரச்னைக்கு...
மாதங்களில் நான் மார்கழி என்றார் பகவான் கிருஷ்ணர். சிறப்பான இந்த மாதத்தில் திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாளை தரிசித்தால் கடன் பிரச்னை தீரும். வியாச மகரிஷியின் சீடரான பைலர் தாமிரபரணி நதிக்கரையில் தங்கியிருந்தார். இவர் தன் மனதிற்குள் தினமும் பெருமாளுக்கு கோடி மலர்களால் அர்ச்சனை செய்தார். ஒருமுறை பைலருக்கு நீலரத்தின மேனியனாக பெருமாள் இங்கு காட்சியளித்தார். இதனடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது.
கருவறையில் கரியமாணிக்க பெருமாளை நின்ற கோலத்திலும், அனந்த பத்மநாப சுவாமியைக் கிடந்த கோலத்திலும், லட்சுமி நாராயணரை அமர்ந்த கோலத்திலும் இக்கோயிலில் தரிசிக்கலாம். தை மாதம் திருவோணத்தன்று நடக்கும் கருடசேவை சிறப்பானது. ரத சப்தமியன்று திருப்பதியை போல காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் உலா நடக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி பிரம்மோற்ஸவம் முக்கியமானவை. திருநெல்வேலி டவுனில் கோயில் உள்ளது.
நேரம்: காலை 7:30 - 10:30 மணி மாலை 5:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 99944 29488, 98421 -64100
அருகிலுள்ள தலம்: நெல்லையப்பர் கோயில்
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0462 - 233 9910

