ADDED : டிச 22, 2024 07:02 PM

குழந்தை வரத்திற்கு...
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அருகே உள்ளது கோட்டைப்பட்டி. இங்கு மலை மீது அருள்பாலிக்கிறார் சென்றாயப் பெருமாள். இவரை தரிசித்தால் குழந்தை வரம் கிடைக்கும்.பெருமாள் காண்பதற்கு சிறுவனாகவும், தாடி மீசையுடனும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருப்பதி பெருமாளை போலவே இவருக்கு அலங்காரம் செய்கிறார்கள்.
விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் பரம்பரையில் வந்தவர் சென்னம நாயக்கர். இவருக்கு குழந்தை இல்லாததால், தினமும் பெருமாளிடம் முறையிட்டார். ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற இவருடைய பசு ஒன்று தாமதமாக வருவதை பார்த்தார். இதைப்போல் தினமும் நடப்பதை அறிந்தார். இதை தெரிந்து கொள்ள மறுமுறை பசுவை பின் தொடர்ந்தார். அது மலைப்பக்கம் தனியாக சென்று சிறுவன் ஒருவனுக்கு பால் கொடுப்பதை பார்த்தார்.
அருகே சென்ற போது சிறுவனாக வந்தது தான் வழிபடும் பெருமாள் என்பதை உணர்ந்து கோயிலையும் கட்டினார். சன்னதிக்கு வலப்புறம் பெருமாள் பசுவிடம் பால் குடித்த இடத்தில் கிருஷ்ண மேடை உள்ளது. தங்கள் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் இந்த மேடையில் வழிபாடு செய்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வத்தலக்குண்டில் இருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 87605 98884
அருகிலுள்ள தலம்: முத்தலாபுரம் சிதம்பரேஸ்வரர் 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 78292 56213

