ADDED : ஜூலை 15, 2026 06:47 AM

சென்னை : 'விரைவு ரயில்களில், விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை, 'ஆன்லைன்' வழியே வசூலிக்கும் முறை, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டு, அபராதத் தொகை, 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
அதாவது, உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு 500 ரூபாய்; ரயில் நிலையங்களில் அனுமதியின்றி, பொருட்கள் விற்பனை செய்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதை செலுத்த மறுத்தால், நீதிமன்றம் வாயிலாக, 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்தும் வகையில், விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், அனுமதியின்றி பயணித்தால் 2,000 ரூபாய், பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட பெட்டிகளில், ஆண்கள் பயணித்தால் 2,500; ரயிலில் புகைப்பிடித்தால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அபராதத் தொகையை, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை முறையில், ஆன்லைன் வழியே வசூலிக்கும் முறை, விரைவில் தொடங்க உள்ளது.
