தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி
ADDED : அக் 15, 2025 01:38 AM
சென்னை:'தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பட்டாசுகள் வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிக ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், உடல் மற்றும் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய பொதுநல வழக்கில், 2018 அக்டோபர், 23ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்ப டுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும்.
'பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், 2018 முதல் தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும். இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்றும், அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் நல பாதிப்புகள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும். இதை கருத்தில் வைத்து, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.