மத்திய தொகுப்பு மின்சாரம் 3,500 மெ.வா., தான் கிடைக்கிறது
மத்திய தொகுப்பு மின்சாரம் 3,500 மெ.வா., தான் கிடைக்கிறது
ADDED : டிச 14, 2024 09:19 PM
சென்னை:தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில், மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்திய அணுமின் கழகத்துக்கு, அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 6,724 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சராசரியாக, 5,000 மெகாவாட் வரை தான் வழங்கப்படுகிறது.
தற்போது, கடலுாரில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால், 1,590 மெகாவாட் திறனில், ஆறு அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, திருவள்ளூர் வல்லுார் அனல்மின் நிலையத்தில், 500 மெகாவாட் திறன் உடைய ஒரு அலகில், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு நேற்று, 3,500 மெகாவாட் வரை தான் மின்சாரம் வழங்கப்பட்டது.
தமிழக மின்தேவையை பூர்த்தி செய்ய, மத்திய மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்வதால், மின்தேவை குறைந்துள்ளது. இதனால், மத்திய மின்சாரம் குறைந்திருந்தாலும், தேவையை பூர்த்தி செய்வதில் வாரியத்திற்கு சிரமம் ஏற்படவில்லை.