நாய்கள் இனப்பெருக்க தடை 100 இடங்களில் ஆப்பரேஷன் வசதி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நாய்கள் இனப்பெருக்க தடை 100 இடங்களில் ஆப்பரேஷன் வசதி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : மே 02, 2025 11:12 PM
சென்னை:'தமிழகம் முழுதும், 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில், விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தெரு நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, 500 டாக்டர்கள், நாய்களை பிடிக்க, 500 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
தமிழகம் முழுதும், 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில், விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்
கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான, ஊனமுற்ற நாய்களுக்கு, 72 காப்பகங்கள் அமைக்கப்படும்
இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில், கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள், அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள், கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்
மாவட்ட அளவில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிக்கு, வெறிநோய் தடுப்பூசி பணிகள் துறை, தனியார் டாக்டர்கள் வாயிலாக மேற்கொள்ள கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவிக்கையின் படி, நகராட்சி நிர்வாக துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து, நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதை கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அலுவலர்களை நியமித்து, இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை, தமிழக விலங்குகள் நல வாரியம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான நிதி வழங்கப்படும்
புதிதாக, 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள், 10 புதிய கால்நடை மருத்துவமனைகளை, சென்னை மாநகராட்சி துவங்கும். கூடுதலாக நாய்பிடி வாகனங்களை கொள்முதல் செய்யவும். அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவும், சென்னை மாநகராட்சி, இதர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், தலைமைச் செயலர் முருகானந்தம், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.