தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து தவறான தகவல் பரப்பும் எதிர்க்கட்சித்தலைவர்: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து தவறான தகவல் பரப்பும் எதிர்க்கட்சித்தலைவர்: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்
ADDED : ஜன 19, 2025 11:12 PM

காரியாபட்டி : ''எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவல்களை குறிப்பிட்டு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். பொருளாதாரம் குறித்து அடிப்படை தெரியாதவர் தான் இப்படி குற்றச்சாட்டை முன் வைக்க முடியும்,'' என, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் அளித்த பேட்டி: பழனிசாமி குற்றச்சாட்டு தொடர்பாக சட்டசபையில் நான் விரிவான விளக்கம் அளித்துள்ளேன். அப்படி இருந்தும் மீண்டும் அவர் சட்டசபையில் தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
மாநிலத்தின் வளர்ச்சி உயரும் போது திருப்பி செலுத்தும் திறன் உயரும். நிதிக்குழு தான் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. 2011ல் ரூ.ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடியாக இருந்த தமிழக பட்ஜெட் தற்போது ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
2021--22 நிதியாண்டில் 28.7 சதவீதம் கடன் பெறலாம் என நிதிக்குழு நிர்ணயித்திருந்த நிலையில் 27.01 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டும் நிதிக்குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்.
நிதி நிலைமை கட்டுக்குள் வைக்க தேவையான நுட்பமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதி வழங்கியிருக்க வேண்டும். வளர்ந்த மாநிலமான தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் மெட்ரோ திட்டங்களை பொறுத்தவரையில் மத்திய அரசு பணியை துவக்கி வைத்ததுடன் சரி, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் ரூ.26 ஆயிரம் கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமர் வீடு திட்டத்திற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்தால் ஏன் கடன் சுமை அதிகரிக்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே நிதி பங்கீடு வழங்கியுள்ளது.
பரந்துார் விமான நிலையம் தொடர்பாக மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர்களிடம் குறைகளைக்கேட்டு அரசிடம் தெரிவித்தால் அரசு சரி செய்வது குறித்து ஆராயும். இவ்வாறு அமைச்சர் பேட்டியளித்தார்.