தொலைதுார கல்வியில் படித்தோரை உளவியலாளர்களாக நியமிக்க எதிர்ப்பு
தொலைதுார கல்வியில் படித்தோரை உளவியலாளர்களாக நியமிக்க எதிர்ப்பு
ADDED : ஆக 16, 2025 09:11 PM
கோவை:தமிழகத்தில், சுகாதாரம், கல்வி, குடும்ப நீதிமன்றங்கள், சிறார் கூர்நோக்கு இல்லங்கள், சமூகநலன் உட்பட துறைகளில் தகுதியான உளவியலாளர்களை நியமிக்க வேண்டும்; தொலைதுாரக் கல்வி முறையில் உளவியல் பயின்றவர்களை தொழில்முறை உளவியலாளர்களாக நியமிக்க கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கல்வி, குடும்பம், வேலை, சமூக உறவுகள் என வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தகுதியான உளவியல் ஆலோசகர்கள் மிகவும் அவசியமாகின்றனர். பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, என்.சி.ஏ.பி.எச்., சட்டம் - 2021 கீழ் வரும் உளவியல் படிப்புகளை, இனி, தொலைநிலை மற்றும் ஆன்லைன் முறையில் வழங்க தடை விதித்துள்ளது.
அதனால், திறந்த மற்றும் தொலைநிலை முறையில் உளவியல் படித்தவர்களை இனி உளவியலாளர்களாக நியமிக்க கூடாது; அரசு மற்றும் தனியார் துறைகளில், விதிமுறைகளுக்கு ஏற்ப நேரடி வகுப்பில் பயின்றவர்களை மட்டுமே உளவியலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என, தமிழ்நாடு உளவியல் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் சில இடங்களில் தன்னார்வ அமைப்புகளால் நடைபெற்று வருகிறது. இத்தகைய ஆலோசனைகள் வழங்குபவர்கள், தகுதியுடையவர்களா என்பதை உறுதி செய்த பிறகே அவர்களை அனுமதிக்க வேண்டும்.
மேலும், சுகாதாரம், கல்வி, குடும்ப நீதிமன்றங்கள், காப்பகங்கள், சமூகநலன் உள்ளிட்ட துறைகளில் உளவியலாளர் நியமனங்கள் நேஷனல் கவுன்சில் பார் ஹெல்த்கேர் புரொபஷனல் வழிகாட்டுதல்கள்படி செய்தால், தமிழகத்தில் மனநல சேவைகளின் தரம் உயரும்.
எனவே, என்.சி.ஏ.பி.எச்., சட்டம் - 2021ன்படி நடைமுறைப்படுத்தி, உளவியலாளர்களின் தொழில் முறை மற்றும் சமூகநலனை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.