ADDED : நவ 14, 2024 11:37 PM
சென்னை:தலைமை செயலகத்தில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை, நேற்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து பேசினார். பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அரசு நிர்ணயிக்கும் விலையில், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. அதை விட கூடுதல் விலை கொடுத்து, தனியாரும் கொள்முதல் செய்கின்றனர்.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில், மத்திய நுகர்வோர் கூட்டமைப்பு வழியாக, நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன் வாயிலாக, படிப்படியே தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பிடம், நெல் கொள்முதல் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பு கிடையாது.
அந்த அமைப்பின் ஏஜன்டுகளாக, தனியார் நிறுவனங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கும் போது பேராபத்து ஏற்படும்.
இதை மறுபரிசீலனை செய்து, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, நெல் கொள்முதல் செய்வதை தொடர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.