ஆழியாறில் 'டிரெக்கிங்' திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு; வனத்துறைக்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள்
ஆழியாறில் 'டிரெக்கிங்' திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு; வனத்துறைக்கு எதிராக குரல் கொடுக்கும் விவசாயிகள்
ADDED : டிச 26, 2024 04:48 AM
பொள்ளாச்சி :   பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., காண்டூர் கால்வாய் வழியாக, 'டிரெக்கிங்' செல்ல வனத்துறை அனுமதி அளித்ததற்கு, விவசாயிகளிடம் எதிர்ப்பு வலுத்துள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் காண்டூர் கால்வாய் 61 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வன அனுபவ கழகம் மற்றும் வனத்துறை கூட்டாக இணைந்து, மலையேற்ற திட்டத்தில், ஆழியாறு கனால் திட்டத்தில், காண்டூர் கால்வாய் பகுதி வழியாக சர்க்கார்பதிக்கு, டிரெக்கிங் அழைத்து செல்லும் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு - சர்க்கார்பதி இடையே, 8 கி.மீட்டரை மூன்று மணி நேரத்தில் மலையேற, 1,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்தால், கால்வாய் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:
பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன நீரை கொண்டு செல்லும் காண்டூர் கால்வாய் பகுதியை, மலையேற்றம் செல்ல தேர்வு செய்தது தவறு. பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
இரு மாநில ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், சுற்றுலாவை அனுமதிப்பது தவறு என்பதை அரசு சிந்திக்க வேணடும். இந்த திட்டத்தை மாற்றியமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'அட்வைஸ்'
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காண்டூர் கால்வாய் அமைந்துள்ள இடம், வனத்துறைக்கு சொந்தமான பகுதியாகும். நீர்வளத்துறைக்கு சொந்தமான இடம் கிடையாது.
ஆனால், டிரெக்கிங் வருவோரை கால்வாய் அருகே அழைத்துச் செல்ல வேண்டாம்.; போட்டோ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று மட்டும் வனத்துறையிடம் தெரிவிக்க திட்டமிட்டு உள்ளோம்.
வெளியூர்களில் இருந்து வருவோர், கால்வாய் ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு அறிவிப்புகளை பின்பற்ற மட்டுமே கூற முடியும். விவசாயிகள் எதிர்ப்பு குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

