சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
UPDATED : டிச 18, 2024 05:50 AM
ADDED : டிச 18, 2024 05:05 AM

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம் நோக்கி நகர்வதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
அதன் அறிக்கை: அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து, நேற்றைய நிலவரப்படி, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வடமாவட்டங்களில் அனேக இடங்கள், பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்புஉள்ளது.
இன்று
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று, 12 முதல், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், 12 செ.மீ., வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில், அதிகபட்சமாக மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில், சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.