ADDED : அக் 04, 2024 11:11 PM
சென்னை:சென்னை எழிலகத்தில் உள்ள, மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி, பொது மக்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், சென்னை எழிலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி நேற்று சென்றார். இங்கு 24 மணி நேரமும் இயங்கி வரும், அவசர அழைப்பு மையத்தில், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
பொதுமக்களின் புகார் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்ட தகவல்களை, பொது மக்களுக்கு விரைவாக தெரிவிக்க வேண்டும்.
மீட்பு மற்றும் தேடல் பணிகளுக்கு, அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.