லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சிக்கல்: வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சிக்கல்: வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : அக் 28, 2024 04:48 PM

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை ஐகோர்ட், மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு மார்ச் 12 ல் சென்னை நங்கநல்லூர் தில்லை நகரில் வசித்த நாகராஜன் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ரூ.7.20 கோடி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு நெருக்கமான மூர்த்தி என்பவரது வீட்டில் ரூ.50 லட்சம் சிக்கியது. விசாரணையில், இவர்கள் லாட்டரி அதிபர் மார்ட்டினுடன் இணைந்து தடை செய்யப்பட்ட லாட்டரியை சென்னையில் விற்க முயன்றது தெரியவந்தது. இதனால், அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகராஜன், மார்ட்டின், இவரது மனைவி லீமா ரோஸ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
போலீசார் நடத்திய விசாரணையின் போது நாகராஜன் உள்ளிட்டோர், '' மார்ட்டினின் மனைவி சென்னை அண்ணா நகரில் ரூ.12.30 கோடி மதிப்புள்ள வீடு வாங்க திட்டமிட்டார். அதற்காக கொடுத்த முன்பணம் தான் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணப்பரிமாற்றம் குறித்து வருமான வரித்துறையிடம் தெரிவித்து விட்டோம்'', எனக் கூறினர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. வழக்கை முடித்து வைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2022ம் ஆண்டு நவ., 14ல் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிமன்றம், நவ., 17 ல் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் வாதிடுகையில், '' தீவிர பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டவர்கள், தப்பிவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது விசாரணை அமைப்புகளின் கடமை. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடித்து வைக்க முடிவு செய்ததால், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள், ரூ.7.20 கோடியை ரொக்கமாக வைத்திருப்பதற்கு காரணம் சொல்வதற்காக அசையா சொத்து தொடர்பாக முன்தேதியிட்ட ஒப்பந்தத்தை உருவாக்கி உள்ளனர். இது பொய்யானது என சந்தேகிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை முடிப்பதில் நியாயம் உள்ளதா?'' என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள், மார்ட்டின் உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். வழக்கு விசாரணையை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் மற்றும் ஐபிசி சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.