மாணவர் பின்புலம் தகவல் சேகரிக்கும் உத்தரவு ரத்து
மாணவர் பின்புலம் தகவல் சேகரிக்கும் உத்தரவு ரத்து
ADDED : ஜன 06, 2026 05:07 AM

-நமது நிருபர் -
அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
மதுரை, அமீர் ஆலம் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க, மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர், கடந்த செப்., 4ல் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, மாணவர்கள் மீது வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா; தாய், தந்தையர் சிறையில் உள்ளனரா; அவர்கள் அகதிகளா உள்ளிட்ட விபரங்களை தலைமையாசிரியர்கள் மூலம் சேகரித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பானது.
வகுப்பறையில் இவ்விபரங்களை சேகரிப்பதால், ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட தகவல்களும் மற்ற மாணவர்களுக்கு தெரிய வரும். இதில், சமூக சூழலை பாதிக்காதவாறு ரகசியம் காக்கப்பட வேண்டும். எதற்காக இத்தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தவில்லை.
மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபுபக்கர் சித்திக் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இத்தகைய தகவல்களை சேகரிப்பது மாணவர்களின் தனியுரிமையை பாதிக்கும். அவர்களை பாகுபடுத்தும் வகையில் தவறான முன்மாதிரியாக அமையும். மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் உத்தரவில் விதிமீறல் உள்ளது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என தெரிவித்தனர்.

