வனப்பகுதியில் மின்வழித்தடம் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு
வனப்பகுதியில் மின்வழித்தடம் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு
ADDED : ஜன 06, 2026 11:57 PM

சென்னை: 'வனப்பகுதிகளில் மின்சார வழித்தடம் அமைக்க, இடம் கோரி வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவுகள் எடுக்கலாம்' என, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும், மின்சாரம் எடுத்து செல்வதற்காக மின் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. நகரங்கள், கிராமங்கள் வழியே, இதற்கான வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம் வாயிலாக, மாநிலங்களுக்கு இடையே, மின் கோபுர வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில், 800 கிலோ வோல்ட் திறன் கொண்ட, உயர் மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கும் போது, வழியில் வனப்பகுதிகள் குறுக்கிடுகின்றன.
இதற்கு தேவைப்படும் வன நிலங்களைப் பெற, ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 800 கிலோ வோல்ட் மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க, 226 அடி அகலத்துக்கு வன நிலங்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 2015ல் புதிதாக சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, 226 அடி அகலத்துக்கு, வனப்பகுதி நிலங்களை வகைபாடு செய்வது தொடர்பான கோப்புகளை பரி சீலிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
கடந்த மாதம் நடந்த, உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:
வனப்பகுதிகளில் மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க, 226 அடி அகலத்துக்கு நிலம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்தும் இடங்களில், வளர்ச்சி குறைந்த மரங்களை நட வேண்டும். வன விலங்குகளுக்கான, மாற்று வாழ்விடங்களை உருவாக்க வேண்டும்.
இந்த நடைமுறைகள் அடிப் படையில், மின் வழித்தடங்களுக்கு நிலம் கோரும் விண்ணப்பங்களை, உரிய அதிகார அமைப்புகள் பரிசீலிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

