பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்கள் நிறுவனங்களுடன் ஆலோசிக்க உத்தரவு
பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்கள் நிறுவனங்களுடன் ஆலோசிக்க உத்தரவு
ADDED : அக் 19, 2025 12:35 AM
சென்னை: 'ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பாக்கெட்டுகளில் வழங்க, பிளாஸ்டிக்கிற்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க, பெரிய நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் நுழைவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, அதே மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அறிவுறுத்தல் இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊட்டி, கொடைக்கானலில், பிளாஸ்டிக்கில், 'பேக்' செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் பெரிய நிறுவனங்கள் குறித்த விபரங்களுடன், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை பார்வையிட்ட நீதிபதிகள், திடக்கழிவுக்கு காரணமான முன்னணி நிறுவனங்கள் அடை யாளம் காணப்பட்டு உள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊர்களில், இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக்கில் பொருட்களை, 'பேக்' செய்து விற்பதற்கு பதில், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து, அந்த நிறுவனங்களுடன் கலந்து பேச வேண்டும் என, அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், 'பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி, பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டியது, அந்த நிறுவனங்களின் பொறுப்பு.
தள்ளி வைப்பு 'இது சம்பந்தமாக, நவ.,14ம் தேதிக்குள் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து, நவம்பர், 21ம் தேதிக்குள் சுற்றுச்சூழல் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'இந்த கூட்டத்தில், வனத்துறை அதிகாரிகளும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் கலந்து கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை நவ., 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.