மகப்பேறு உயிரிழப்புக்கான காரணம் 24 மணி நேரத்தில் கண்டறிய உத்தரவு
மகப்பேறு உயிரிழப்புக்கான காரணம் 24 மணி நேரத்தில் கண்டறிய உத்தரவு
ADDED : நவ 23, 2024 12:10 AM
சென்னை:சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குனரக அலுவலகத்தில், அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம், சுப்ரியா சாஹு தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அவர் பேசியதாவது:
அனைத்து கர்ப்பிணியரையும் கண்காணித்து, அவர்கள் உரிய மருத்துவ மையங்களில், பிரசவ சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பேறுகால உடல்நல சிக்கல்களில் உள்ள கர்ப்பிணியர் மீது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிரசவ தேதிக்கு இரண்டு வாரத்திற்கு முன், 102 உதவி மையம் வாயிலாக, கர்ப்பிணியரை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் உடல்நிலையை அறிந்து, மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை தேவைப்பட்டால், அது குறித்த தகவல்களை, அப்பகுதி கிராம சுகாதார செவிலியர்களிடம் தெரிவித்து, பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலம் முழுதும், தினசரி நடக்கும் பிரசவங்களை கண்காணிப்பதும் அவசியம். பிரசவத்தின்போது உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கான காரணத்தை அறிவதற்கான, முதற்கட்ட ஆய்வை, 24 மணி நேரத்திற்குள் முன்னெடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, மகப்பேறு உதவி மையங்களுடன், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகளின் அடிப்படையில், அவற்றை வகைப்படுத்தி, மகப்பேறு சிகிச்சைகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.