உழவர் உற்பத்தியாளர் குழுக்களை மேம்படுத்த குழு அமைக்க உத்தரவு
உழவர் உற்பத்தியாளர் குழுக்களை மேம்படுத்த குழு அமைக்க உத்தரவு
ADDED : ஜன 20, 2026 07:04 AM

சென்னை: தமிழக பா.ஜ., மேற்கொண்ட முயற்சியால், உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் குறைகளுக்கு தீர்வு காணவும், அவற்றை மேம்படுத்தவும், 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தர விட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக பா.ஜ., விவசாய அணித் தலைவர் நாகராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் 500 குழுக்கள் உட்பட, நாடு முழுதும், 10,000க்கும் அதிகமான, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், 300 முதல் 1,000 விவசாயிகள் ஒருங்கிணைந்து, தங்களின் விளைபொருட்களை விற்க, நிறுவனத்தை உருவாக்குவர்.
இக்குழு இந்திய சட்டப்படி, ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்படுகிறது. இது, விவசாயிகளை தொழில் அதிபர்களாக மாற்ற உதவுகிறது. குழுவில் உள்ள சில விதிமுறைகள், விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை. குறிப்பாக, வருமான வரி, ஜி.எஸ்.டி., மிகுந்த சிரமத்தை கொடுப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், சமீபத்தில் ஈரோடு மாவட்டம் வந்தார். அவரிடம், உழவர் உற்பத்தியாளர் குழுவின் இயக்குநர்கள், தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். டில்லியில் நேற்று முன்தினம் சிவ்ராஜ் சிங் சவுகானை சந்தித்த போது, ஈரோட்டில் விவசாயிகள் அளித்த மனுக்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
பின், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை மேம்படுத்த, மத்திய வேளாண் துறையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார்.
இக்குழுவில் தமிழக வேளாண் துறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் இடம்பெற உள்ளனர். அக்குழுவினர், தமிழகம் வந்து, விவசாயிகளை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

