ADDED : மார் 17, 2024 05:59 AM
சென்னை : முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, ஆவணங்கள் வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக, பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக, 2012 ல்மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கின் ஆவணங்கள் சிலவற்றை கேட்டு, ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஜெயச்சந்திரன் சார்பில் வழக்கறிஞர் வி.ஜான்சன் யுவராஜ் மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்னம் ஆஜராகி, ''விளக்கம் கோரியநோட்டீசுக்கு பதில் அளித்த ஆவணங்கள் தேவைப்படுகின்றன. வருவாய் கோட்ட அதிகாரியை குறுக்கு விசாரணை செய்யும் போதும் தேவைப்படுவதால், ஆவணங்களை வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், ''இந்த வழக்கில் மொத்தம் 65 சாட்சிகளில், இதுவரை 17 சாட்சிகளிடம் விசாரணை முடிந்து விட்டது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
தன் வழக்கை திறமையாக எதிர்கொள்ள, மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். ஆவணங்களை பரிசீலிக்கும் போது, அவற்றின் தொடர்பை சிறப்பு நீதிமன்றம் ஆராயும். தற்போதைய கட்டத்தில் ஆவணங்களை வரவழைக்க, மனுதாரரை தடுக்க வேண்டிய தேவையில்லை.
எனவே, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 ம் தேதி சாட்சி விசாரணைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரிய ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.

