பழநி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
பழநி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
ADDED : மார் 12, 2024 11:06 PM
மதுரை, : பழநி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதி மன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று விசாரித்தது.
கோயில் தரப்பு: கிரிவலப்பாதையில் வாகனங்கள் நுழையாதவாறு சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான பஞ்சாமிர்தம் ஸ்டால்கள் அகற்றப்பட்டு, அங்கு பக்தர்களின் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குமிடமாக மாற்றப்படும்.
கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: வையாபுரி கால்வாய், புலிப்பாணி ஆசிரமம் அருகே மற்றும் சன்னதி தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு குடிநீர் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு அடுத்தவாரம் ஒத்தி வைத்தனர்.

