ADDED : நவ 05, 2024 12:37 AM
சென்னை : கார்டுதாரர்களுக்கு தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய, ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை அதிகம் இருப்பு வைக்கும்படி, அதிகாரிகளை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
உணவு துறை செயல்பாடு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. செயலர் ராதாகிருஷ்ணன், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அமைச்சர் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, விரைவாக அரிசியாக மாற்ற, அரவை ஆலைகளுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மழைக்காலம் துவங்கியுள்ளதால், தாழ்வான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை, மாற்று இடங்களுக்கு விரைவாக மாற்ற வேண்டும்.
ரேஷன் கடை, கிடங்குகளில் உள்ள தானியங்கள் மழையில் நனையாதபடி பாதுகாக்க வேண்டும். கார்டுதாரர்களுக்கு தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய, ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை அதிகளவில் இருப்பு வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

