மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : ஜன 09, 2025 01:56 AM
சபரிமலை: ஜன. 14 ல் மகரஜோதி நாளில் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி சபரிமலை போலீஸ் கோ ஆர்டினேட்டரான ஏ.டி.ஜி.பி. க்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் கேரள உயர் நீதிமன்ற சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ். முரளி கிருஷ்ணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
சபரிமலையில் மகர ஜோதியை ஒட்டி விருச்சுவல் கியூ முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங்கில் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் பற்றி பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் அதை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சபரிமலை போலீஸ் கோஆர்டினேட்டர் எடுக்க வேண்டும். பத்தணம்திட்டா கலெக்டர் மற்றும் எஸ்.பி., சபரிமலை செயல் அலுவலர், சிறப்பு ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
டிச. 20 முதல் ஜன. 2 வரை சன்னிதானம் ,பம்பை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உணவுப் பொருட்களுக்கு அதிக விலை வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தடுக்க வேண்டும். அரவணை உற்பத்தியின் போது சில செட் அரவணையில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவு ஈரப்பதம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட வேண்டும். பக்தர்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
இந்த விசாரணையின் போது சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது :
பம்பை, எருமேலி , வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் தற்போது 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஸ்பாட் புக்கிங் செய்கிறார்கள்.
தற்போது சன்னிதானத்திற்கு வந்தவர்கள் தரிசனம் முடிந்து திரும்பி செல்லாமல் மகரஜோதி தரிசனத்திற்காக தங்கும் நிலை உள்ளது.
இது மகரஜோதி நாளில் சபரிமலையிலும் பம்பையிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.