விஜயகாந்த் கனவு திட்டம் நிறைவேற்றம்: முதல்வருக்கு நன்றி!
விஜயகாந்த் கனவு திட்டம் நிறைவேற்றம்: முதல்வருக்கு நன்றி!
ADDED : ஆக 13, 2025 05:27 AM

சேலம் : “விஜயகாந்த் கனவு திட்டத்தை, 'தாயுமானவர்' திட்டம் பெயரில், தி.மு.க., அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது. இது, தே.மு.தி.க.,வுக்கு கிடைத்த வெற்றி. அதற்காக, முதல்வருக்கு நன்றி,” என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க.,வின், சேலம் மாவட்ட பூத் முகவர்கள் சந்திப்பு, ஆலோசனை கூட்டம், அம்மாபாளையத்தில், நேற்று நடந்தது. அதில் பங்கேற்று கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தே.மு.தி.க., நிறுவனர் வி ஜயகாந்த், முதல் தேர்தல் அறிக்கையிலேயே, 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என அறிவித்தார். அவரது கனவு திட்டத்தை, 'தாயுமானவர்' திட்டம் என்ற பெயரில், தி.மு.க., அரச செயல்படுத்தியுள்ளது. இது, தே.மு.தி.க.,வுக்கு கிடைத்த வெற்றி. அதற்காக, முதல்வருக்கு நன்றி.
நடிகர் விஜய், விஜயகாந்தை மானசீக குரு என அறிவித்து ஏற்றுக்கொண்டால், விஜயகாந்த் படத்தை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற கட்சியினர் பயன்படுத்தக்கூடாது.
'ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' முறையை, தே.மு.தி.க., வரவேற்கிறது. இதனால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி, குறைகளை சரிசெய்து மக்களுக்கு நல்லாட்சி தர முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.