'எங்கள் கட்சிக்காரர்களும் விரும்புகின்றனர்' இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் சூசகம்
'எங்கள் கட்சிக்காரர்களும் விரும்புகின்றனர்' இடைத்தேர்தல் குறித்து அமைச்சர் சூசகம்
ADDED : டிச 24, 2024 09:38 PM
ஈரோடு:'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சிக்காரர்களுக்கும் விருப்பம் இருக்கும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். அப்படி எந்த தீர்மானமும் அங்கு நிறைவேற்றப்படவில்லை. வேறு தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட்டன.
தவிர, கோவையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூட, 'ஈரோட்டில் தி.மு.க., கூட்டணியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து, தோழமை கட்சிகளுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம் என கூறியுள்ளார்.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை சீராக கொண்டு செல்கிறார். கூட்டணி கட்சியினரும் அவரை முழுமையாக நம்புகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களது கட்சியினரும் போட்டியிட விருப்பமாக உள்ளனர். இந்தக் கருத்தை கட்சித் தலைமையிடம் சொல்வோம். தலைமை என்ன சொல்கிறதோ, அதை ஏற்று செயல்படுவோம்.
தி.மு.க., 200 தொகுதிகளில் வெல்லும் என முதல்வர் தானாக சொல்லவில்லை. பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த தகவல் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த சில அமைப்புகள் சர்வே செய்து தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் தான், அவர் அதை வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த, 50 ஆண்டு காலம் அரசியலில் அவர் உள்ளதால், அவருக்கும் கள நிலவரம் தெரியும். இதை வைத்துத்தான், கோவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், 'ஈரோடு சென்று வந்த பின், தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி என்பது மேலும் கூடுதலாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என கூறி உள்ளார்.
எந்த விஷயத்துக்காகவும், பழனிசாமி பாராட்டுவார் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் எதிர்த்து பேசி வந்தால்தான், நாங்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்வோம். அந்த வகையில் அவருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.