பாகிஸ்தான் பார்லி., பொதுத்தேர்தல்: நவாஸ் ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு
பாகிஸ்தான் பார்லி., பொதுத்தேர்தல்: நவாஸ் ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு
UPDATED : பிப் 10, 2024 02:48 PM
ADDED : பிப் 10, 2024 01:46 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே பேச்சு வார்த்தை நடந்து உள்ளது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் 91 இடங்களை கைப்பற்றியதால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று முன்தினம் பொது தேர்தல் நடந்தது. மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய பார்லிமென்டிற்கு, 266 பேர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மீதியுள்ள இடங்களில், 60 பெண்களுக்கும், 10 அந்நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 265 இடங்களுக்கு ஓட்டுப் பதிவு நடந்தது. இதில், ஆட்சி அமைப்பதற்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கியது.
இம்ரான் ஆதரவாளர்கள்
மொத்தமுள்ள 266 இடங்களில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள், 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரீப் கட்சி 71 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களையும் வென்றுள்ளன.
கூட்டணி
இந்நிலையில் பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. மொத்தமுள்ள 266 இடங்களில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் 91 இடங்களை கைப்பற்றியதால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.