கூகுள் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு
கூகுள் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு
UPDATED : செப் 06, 2025 07:40 AM
ADDED : செப் 06, 2025 07:35 AM

வாஷிங்டன்: பயனர்களின் தரவுகளை கூகுள் கண்காணிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், முப்பதாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்டது. இதற்கு அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
உலகம் முழுவதும் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தரவுகளை கூகுள் கண்காணிக்கிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்களை கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விளம்பர தொழில்நுட்ப சந்தையில் தனது ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக கூகுள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாக உறுதி அளித்துள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஐரோப்பிய ஒன்றியம் இன்று மற்றொரு சிறந்த அமெரிக்க நிறுவனமான கூகுளை $3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்து தாக்கியுள்ளது. கூகிள் மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பல அபராதங்கள், வரிகளை விட அதிகமானது. இது மிகவும் நியாயமற்றது. இதை அமெரிக்க மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு 17 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ( இந்திய மதிப்பில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்). அவர்கள் கட்டாயத்தின் பேரில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை அவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும். இல்லையெனில், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்க நான் கட்டாயப்படுத்தப்படுவேன்.
நான் முன்பே கூறியது போல், நாங்கள் இந்த பாரபட்சமான செயல்களை அனுமதிக்க மாட்டோம். கூகிள் கடந்த காலங்களில் 13 பில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தி உள்ளது. அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது? இப்படி அபராதம் விதிப்பது, அவர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வழியாகிவிட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடைமுறையை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.