மேகதாது அணை விவகாரத்தில் அரசு அலட்சியம் பழனிசாமி குற்றச்சாட்டு: அ.தி.மு.க., வெளிநடப்பு
மேகதாது அணை விவகாரத்தில் அரசு அலட்சியம் பழனிசாமி குற்றச்சாட்டு: அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : பிப் 23, 2024 02:21 AM

சென்னை: மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கடந்த மாதம், 28ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடந்தது வேதனை அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க, இந்த ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது.
அ.தி.மு.க., ஆட்சியில், விவாதத்திற்கு பல முறை முயற்சித்த போது, கடுமையாக எதிர்த்தோம். கடந்த, 2018ல் மேகதாது அணை குறித்த பிரச்னை, மத்திய நீர்வள கமிஷன் பார்வைக்கு சென்ற போது, அதன் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.
பரிந்துரை
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சி இருக்கும் வரை, மத்திய நீர்வள கமிஷனோ, காவிரி மேலாண்மை ஆணையமோ, மேகதாது பிரச்னையை, அதன் கூட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கவில்லை.
நாங்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தி.மு.க., ஆட்சியில், இம்மாதம் 1ம் தேதி, மேகதாது அணை கட்டுவது குறித்த விவாதத்தை, 28வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அனுமதித்து விட்டீர்கள். கர்நாடக அரசு ஆணையத்தின் விவாதப் பொருளில், தந்திரமாக இதை சேர்த்து விட்டது.
மேகதாது குறித்த விவாதம், நம் எதிர்ப்பை மீறி சேர்க்கப்பட்டிருந்தால், வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அதை விடுத்து விவாதத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டீர்கள்.
இப்போது ஆணையம், அதன் அதிகார வரம்புக்கு சம்பந்தம் இல்லாத, மேகதாது அணை கட்டுவது குறித்த கருத்தை, மத்திய நீர்வள கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளது.
கர்நாடக முதல்வர், மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கி உள்ளார். இது, டெல்டா பாசன விவசாயிகளிடம், பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் என்ன நடந்தது என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், பட்ஜெட்டிலோ, வேளாண் பட்ஜெட்டிலோ எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பிரச்னையில், தி.மு.க., அரசின் அலட்சிய போக்கு, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
அச்சம்
காவிரி ஆணையத்தின் செயலை கண்டித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும்.
அரசு அலட்சியமாக இருந்ததால், 50 ஆண்டுகள் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் விளையுமோ என்ற அச்சம் ஏற்பட்டுஉள்ளது.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இதே கருத்தை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, பா.ம.க., ஜி.கே.மணி, பா.ஜ., வானதி சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.